மில்ரன்கீன்ஸ் தமிழ்க்கல்விக் கழகமானது புலம்பெயர் வாழ்வில் எங்கள் உயிரிலும் மேலான தாய்மொழியாம் தமிழ்மொழியையும்,தமிழர் தம் கலை கலாசாரங்களையும் எங்கள் அடுத்த தலை முறைக்கு எடுத்துச் செல்லும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த கல்விக்கழகமானது மில்ரன்கீன்சில் உள்ள தன்னார்வத் தொண்டர்களால் அதன் தேவையையும்,அகத்தியத்தையும் உணர்ந்து தொடர் முயற்சிகளால் 03-12-2011 அன்று பெருந்தொகையானவர்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டது.
இக் கல்விக்கழக்தில் தலைமையாசிரியர், உபதலைமை ஆசிரியர் உட்பட 53 ஆசிரியர்கள் தங்கள் சுயவிருப்புடனும் ,சேவை நோக்குடனும் மாணவர்களுக்கான கல்விப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அண்ணளவாக 320 மாணவர்கள் அதிபாலர் நிலையிலிருந்து வளர்தமிழ் 12 வரை கல்வி கற்கின்றார்கள்.
அனைத்து மாணவர்களும் வருடாவருடம் பாடசாலை மட்டத்திலும், பிரித்தானியா மட்டத்திலும் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையால் நடாத்தப்படும் தமிழ்மொழித்தேர்வு , தமிழ்த்திறன் போட்டி மற்றும் செங்காந்தள் போட்டிகளிலும் கலந்துகொள்வதோடு பிரித்தானிய மட்டத்தில் பங்கு பெறும் 122 பள்ளிகளுடனும் போட்டியிட்டு அதிகூடிய மாணவர்கள் வெற்றியீட்டிய பாடசாலையாகவும் சாதனைபடைத்து நிற்கின்றது.
மேலும் எமது பள்ளியின் வருடாந்த நிகழ்வுகளாக தைப்பொங்கல், நவராத்திரி,நத்தார்விழா, பரிசளிப்புவிழா மற்றும் விளையாட்டுப்போட்டி என நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
அத்துடன் கணிசமான எங்கள் கல்விக்கழக ஆசிரியர்கள் பிரித்தானிய தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் நடாத்தப்ப்படும் ஆசிரியர் பயிற்சிகளில் கலந்து கொள்வதுடன், அவர்களால் நடாத்தப்படும் சகல பரீட்சைகளுக்கும் தேர்வு நடத்துநர்களாகவும், தேர்வு மையப்பொறுப்பாளர்களாகவும் கலந்துகொள்கின்றனர். அத்தோடு பல ஆசிரியர்கள் வருடாவருடம் பிரான்சில் நடைபெறும் வினாத்தாள் திருத்தும் பணிகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றனர்.மேலும் கணிசமான ஆசிரியர்கள் பட்டயக்கல்வியைமுடித்து பட்டப்படிப்பையும் முடித்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
குறித்த பாடசாலையனது பெற்றோர்களால் தேர்தல் முறை மூலம் தெரிவுசெய்யப்படும் நிர்வாகத்தினர் மூன்று வருடத்திற்கு ஒரு முறை தெரிவு செய்யப்பட்டு அவர்களின் கட்டமைப்பின் கீழ் நடாத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாடசாலையை ஆரம்பித்த நிறுவக உறுப்பினர்கள், நிர்வாகம்,ஆசிரியர்குழாம், என்றுமே ஆதரவான பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என்று பன்முக ஆளுமை மிக்கவர்களாலும் மிகவும் சிறந்த முறையிலே தம் பணிகளை 14வது வருடமாகச் சிறப்புடன் செய்து வருகின்றனர்.
தொடர்ந்தும் உங்கள் அனைவரதும் ஒத்துழைப்புடன் வெற்றி நடைபோடும் என்பதில் பெருமை கொள்கின்றோம்.
தமிழால் இணைவோம்! தமிழால் வளர்வோம்! தமிழால் உயர்வோம்!
நிர்வாகம். மில்ரன் கீன்ஸ் தமிழ் கல்விக்கழகம்.
16-02-2025